Tuesday 17 June 2008

அறிமுகம்

திருக்குறளுக்கு உரை எழுதும் முயற்சியில் நண்பர்கள் ஈடுபட்டிருந்தோம். அப்போது முன் வைக்கப்பட்ட யோசனைகளில் ஒன்று, குறள் வெண்பாவை நாலடி வெண்பாவாய் விரிப்பது.

அவ்வாறு எழுதுவதென்றால், பங்கு பெறும் அனைவரும் வெண்பா பயிற்சி பெற வேண்டும். புரிந்ததை செய்யுள் நடையில் விவரிக்க என மிகுந்த நாளாகும். ஆதலால் உரை நடையில் எழுதி விட்டோம், புரிந்ததை.

மதுரைத் திட்டத்தில் சில பாடல்கள் படி எடுத்துக் கொடுக்கும் பணியில் இருந்த போது சோமேசர் முதுமொழி வெண்பாவைப் படிக்க நேர்ந்தது. தேர்ந்தெடுத்த குறள்களுக்கு, அதிகாரத்திற்கு ஒன்றென, 133 வெண்பாக்களால் எழுதப் பட்டது அந்நூல். http://library.senthamil.org/126.htm

ஆசை மீண்டும் துளிர்த்தது. குறள் உரைத் திட்டத்திற்கு உருவாக்கப் பட்ட இந்த வலைப்பூ பயன்படுத்தப் படவில்லை. அதனை தளமாக்கி இதோ திருக்குறளை அளவடி வெண்பாவில் நிறைக்க வந்து விட்டோம்.

திருக்குறளுக்கு பொருள் மேற்கண்ட குறள் உரையில் இருந்து எடுத்துக் கொள்வதாக இருக்கிறோம். இடையே வேறு குறள் கதைகள் கிடைக்கப் பட்டாலும், புதிய சிந்தனைகள் இருந்தாலும் இணைப்பதில் மகிழ்ச்சியே. வாருங்கள், வாழ்த்துங்கள்.